தையே தமிழர் புத்தாண்டு: ஆளுநர் ஆய்வு தொல்காப்பியத்திலுமா? - சுப.வீரபாண்டியன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளையும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித ் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களையும் தங்களின் உரைகளில் மேற்கோள் காட்டுவது நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பிரதமர் குறிப்பிட்ட குறள் எது என்பதைக் கண்டறியத் தமிழறிஞர்கள் பலராலும் கூட முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்க, திருக்குறள் பற்றி அவருக்குப் பேசத் தோன்றியதே என எண்ணி நாம் மகிழ்கின்றோம். இப்போது தன் பங்கிற்குத் தமிழ்நாட்டின் ஆளுநர் தொல்காப்பியத்தை மேற்கொள் காட்டி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார். மராத்தியத்தில் பிறந்த அவர், தொல்காப்பியத்தில் ஆராய்ச்சி செய்து நம் புத்தாண்டைக் கண்டுபிடித்திருக்கிறார். அடடா! அவர் ஆய்வு நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. தொல்காப்பியத்தில் ஓர் ஆண்டை ஆறு கால நிலைகளாகப் பிரித்து, அதில் சித்திரை மாதமே இளவேனிற்காலத்தில் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார். தமிழர்கள் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகவும், ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர...